ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், அமுதா!
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதல்முறையாக மிக முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் உதயச்சந்திரன் மற்றும் ஐஏஎஸ் அமுதா ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்றபின் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டு உள்ளனர். அந்த வகையில், நிதித்துறை மற்றும் டாஸ்மாக் (TASMAC) போன்ற முக்கியத் துறைகளுக்குப் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராக இருந்த கி.நந்தகுமார், ஐஏஎஸ் டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக (Managing Director) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வி.கிறிஸ்துராஜ், ஐஏஎஸ் அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி நிர்வாகத்தில் மிக முக்கிய அதிகாரியாக இருந்த உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்ஸைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ், தற்போது அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், கூடுதல் பொறுப்பு வகித்து வந்த அமுதா ஐஏஎஸ்ஸுக்குப் பதிலாக, வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையராக ந.முருகானந்தம், ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) மாநிலத் திட்ட இயக்குநராக இருந்த முனைவர் ச.ஸ்வர்ணா, ஐஏஎஸ், சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், நிர்வாக இயக்குநராக இருக்கும் அண்ணாதுரை, ஐஏஎஸ் முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் கூடுதல் செயலாளராக இருக்கும் . விஷ்ணு ஐஏஎஸ், பணிமாறுதல் செய்யப்பட்டு, முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

