கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. 3 பேரும் குற்றவாளிகள்.. நீதிமன்றம் தீர்ப்பு!
கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இரவு, கல்லூரி மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், மாணவியின் ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் மூன்று முக்கிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா என்கிற தவசி (20 வயது), சதீஷ் என்கிற கருப்பசாமி (30 வயது), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21 வயது) ஆகிய மூன்று என காவல்துறையினர் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் குற்றவாளிகள் மூன்று பேரும் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினரிடம் இருந்து அவர்கள் தப்பிக்க முயன்றபோது மூன்று பேரையும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
இந்த சூழலில் தான், இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், 270 பக்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளனர். மேலும், 3 மணிக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

