“தமிழின் இனிமையும், தமிழரின் உயரிய பண்பாடும்..” - முதல்வர் விஜய் தமிழ்நாடு தின வாழ்த்து!!
மெட்ராஸ் மாநிலம் என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக 'தமிழ்நாடு' என மாற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில், அந்தச் சட்டம் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட நாளை 'தமிழ்நாடு நாள்' ஆக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தான், ஜூலை 18 தமிழ்நாடு நாளான இன்று வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்! தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

