விடுமுறைக்குப் பின் கூடும் சட்டமன்றம்.. முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு திட்ட செயலாக்க துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித்துறை, சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், 2 நாள் விடுமுறைக்குப் பிறகு கூடும் சட்டமன்றத்தில், 3 முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
முதல்வர் விஜயின் வசமுள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் மானியக் கோரிக்கையும், உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகளும் விவாதிக்கப்படவுள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையின் மானியக் கோரிக்கையின்போது, சென்னை மாநகராட்சி சொத்துவரி சர்ச்சை, மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கானபணிகள் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பள்ளிக்கல்வி துறை மானியக் கோரிக்கையின்போது, தவெக நிர்வாகிகள் பள்ளிகளில் சென்று ரீல்ஸ் எடுப்பது, திருவொற்றியூர் பள்ளி மாணவர் கொலை உள்ளிட்ட பிரச்னைகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில், மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை விவகாரம் எழுப்பப்படும் என தெரிகிறது.

