நட்சத்திர தொகுதி| திருமங்கலத்தில் யாருடைய ஆதிக்கம்.. ஆர் பி உதயகுமாருக்கு வாய்ப்பு எப்படி?
திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி. உதயகுமாரின் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற அவர், பல திட்டங்களை கொண்டு வந்தாலும், சில முக்கிய கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவில்லை. திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை களத்தில் இறங்கியதால், இம்முறை போட்டி கடுமையாக இருக்கும்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமாரின் அடையாளமாகத் திகழ்வது மதுரை மாவட்டத்திலிருக்கும் திருமங்கலம் தொகுதி. முதன் முதலில் அவர் போட்டியிட்ட தொகுதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் என்றாலும், 2016 மற்றும் 2021 என அடுத்தடுத்த தேர்தல்களில் திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2016இல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயராமை விட 23,590 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற உதயகுமார், 2021இல் திமுக மாவட்ட செயலாளர் மணிமாறனை 14,087 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
முழுக்க முழுக்க கிராமங்களை கொண்ட இந்தத் தொகுதியில் மல்லிகை, பருத்தி விவசாயம், நெசவுத் தொழில் மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை போன்றவையே முக்கிய வாழ்வாதாரங்கள். எஸ்ஐஆருக்குப் பின், சுமார் 35 ஆயிரம் பேர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது 2.59 லட்சம் வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ளனர்.
அமைச்சராக இருந்தபோது, மதுரை மாவட்டத்திற்கு பல திட்டங்களைக் கொண்டுவந்த உதயகுமார், கடந்த 5 ஆண்டுகளில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம், புதிய நகராட்சி கட்டிடம், எய்ம்ஸ் மருத்துவமனை போன்றவற்றை கொண்டுவர ஆர்வம் காட்டினார். ஆனாலும், முறைகேடாக அமைக்கப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றுதல், குடிநீர் ஆதார மேம்பாடு, கிராமப்புறத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகள் இன்னமும் எதிர்பார்ப்புகளாகவே நீடிக்கின்றன. இந்த முறை திமுக, நாம் தமிழர் கட்சியோடு, தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இறங்கியிருப்பது திருமங்கலம் களத்தை இப்போதே சூடாக்கியிருக்கிறது.

