திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி
திருச்சி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் முத்தையாம்பாளையம் அருகே கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டும் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கோயில் திருவிழாவின் ஒருபகுதியாக, பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் பிடிக்காசை பிடிக்க முண்டியடித்தனர். இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் பெண்கள் மற்றும் 3 பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது.அத்துடன் 10-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.