தொகுதிப் பங்கீடு | சிபிஎம்மிடம் முதல்வர் வைத்த வேண்டுகோள்.. நாளை மீண்டும் கூடும் செயற்குழு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், திமுக 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அக்கூட்டணியில், தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், சிபி(எம்), விசிக, மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பெரிய கூட்டணியை அமைத்திருப்பதால் அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாது என தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தையின் ஆரம்பகட்டத்திலேயே தெரிவித்துவிட்ட திமுக, அதன்படியே, ஐயூஎம்எல், மதிமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த தேர்தலைவிடக் குறைவான தொகுதிகளையே ஒதுக்கியது. எனினும் காங்கிரசின் வலிமையான பேரத்தால் 3 தொகுதிகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில்தான், தொகுதிப் பங்கீட்டு விசயத்தில் ஒரு பக்கம் விசிக வேதனை தெரிவித்திருக்கும் நிலையில், மறுபக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடனான பேச்சுவார்த்தை இறுதிமுடிவை எட்டாமல் இருந்துவருகிறது. முன்னதாக, இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டு வந்த சிபிஎம் 3 கட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த தேர்தலில் கொடுத்த 6 தொகுதிகளையாவது தற்போதும் தரவேண்டும் என திமுகவை வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், 5 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்ற முடிவில் திமுக இருந்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ’கட்சியுடன் கலந்தாலோசித்து முடிவுகளை அறிவிக்கப்படும்’ என கூறியிருந்தார் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். இதையடுத்து, நேற்று சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநிலக் குழுக்கூட்டம் நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த இக்கூட்டத்தில் 6 தொகுதிகளையே கேட்க வேண்டும் என்ற முடிவில் சிபிஎம் நிர்வாகிகள் நிலையாக இருந்ததாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று சிபிஎம்மின் பொதுச்செயலாளர் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் 4-ஆவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 5 தொகுதிகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வலியுறுத்தியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், முதல்வர் வலியுறுத்தலின்படி 5 தொகுதிகளைப் பெற்றுக் கொள்ளலாமா அல்லது 6 தொகுதிகளை மீண்டும் கேட்டு வலியுறுத்தலாமா என்பது குறித்த முக்கிய முடிவை எடுப்பதற்கான மாநில செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. 5 தொகுதிகளை சிபிஎம் ஏற்றுக் கொள்ளுமா அல்லது வேறு ஏதேனும் ஒரு முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
