கெடுவிதித்த திமுக.. இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ்! முதல்வரை சந்தித்த ப. சிதம்பரம்!
திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. புதிய வரவாக திமுகவில் சில கட்சிகள் இணைந்திருக்கும் வேளையில், அனைத்து கூட்டணி கட்சிகளும் கூடுதலாக தொகுதிகளை கேட்பது திமுகவிற்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
எல்லாம் ஒருபுறம் இருக்க ஆட்சியில் பங்கு என்ற குரலை தொடர்ந்து எழுப்பிவரும் காங்கிரஸ், வரும் தேர்தலில் 39 தொகுதிகளும் 2 மாநிலங்களவை சீட்டும் வேண்டும் என திமுகவை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அவ்வளவு தொகுதிகள் கொடுக்கமுடியாது என திமுக மறுத்திருக்கும் நிலையில், 25 +1 என்ற தொகுதிகளை கொடுக்க முன்வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்தசூழலில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தில் ’சகோதரர்’ என்ற வார்த்தையை ராகுல்காந்தி தவிர்த்திருப்பது திமுக-காங்கிரஸ் இடையேயான முரண்பாடு அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவை காங்கிரஸ் இன்று தெரிவிக்க வேண்டும் என திமுக கெடுவிதித்தது.
சிக்கல் தீருமா..? சுமூகம் ஏற்படுமா..?
காங்கிரஸுக்கு திமுக இன்றுடன் கடைசிநாளாக கெடுவிதித்த நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, மூத்த தலைவர் பா.சிதம்பரத்தை நேரில் பார்த்து ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் உள்ள பா.சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை இருவரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசுகின்றனர்.
திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இறுதிகட்ட கூட்டணி குறித்து முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கிறது. இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின், பா.சிதம்பரம் உட்பட காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலுவும் பங்கேற்க உள்ளனர். சுமூகமான முடிவு எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

