எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணி| கடற்கரை-தாம்பரம் இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளுக்காக புற நகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டும், நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகள் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதிகரிக்கப்படும் பேருந்துகள் இயக்கம்!
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை இடையே கிண்டி, அண்ணா சாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம் வழியாக காலை 6.30 முதல் காலை 8.43 வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே மார்க்கத்தில், கிண்டி, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை இடையே காலை 6.51 முதல் காலை 8.36 வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் 20 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே தலைமை செயலகம், சேப்பாக்கம், அண்ணா சாலை, கிண்டி வழியே மாலை 5 மணி முதல் இரவு 9 .13 வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே மார்க்கத்தில் பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர், தி.நகர், கிண்டி வழியாக மாலை 5. 21 நிமிடம் முதல் இரவு 7.6 வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் 20 பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
ரயில் பயணச்சீட்டு, மாதாந்திர பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மெட்ரோ ரயில்கள்..
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே, காலை, மாலை Peak hours நேரங்களில் கூட்ட நெரிசலை குறைக்க, வரும் 28ஆம் தேதி முதல் 15 பெட்டிகளை கொண்ட 5 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மாலை 5 .15, 5 .30, 6.10, 7.10 மற்றும் இரவு 8 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 6.40, 7.10, 8.10, 8.55, 9.15 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் தாம்பரம், மாம்பலம், கிண்டி, எழும்பூர், கடற்கரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான விரைவுப் பாதையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்பதால், 60 நிமிடங்களிலேயே தூரத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, Peak hours நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்குமாறு மெட்ரோ நிர்வாகத்திடம் தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.

