தேர்தல் களம் | 2 தொகுதிகளே கொண்ட பெரம்பலூர்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், விவசாயத்தையும், பால் உற்பத்தியையும் உயிர்நாடியாகக் கொண்டிருக்கிறது. சின்ன வெங்காய உற்பத்தியில் ஆசியாவிலேயே முதலிடம் வகிக்கும் இப்பகுதி, தற்போது 2026 தேர்தல் திருவிழாவிற்குத் தயாராகிவிட்டது. பெரம்பலூர் மற்றும் குன்னம் என இரண்டு தொகுதிகளை மட்டுமே உள்ளடக்கிய மிகச்சிறிய மாவட்டமாக இருந்தாலும், அரசியல் ரீதியாக இது எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.
பெரம்பலூர் தொகுதி ; அண்மைக்காலத் தரவுகளின்படி, பெரம்பலூர் தனித் தொகுதியில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களே பெரும்பான்மையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 1952- இல் மெட்ராஸ் மாகாணத் தேர்தலின்போது இது ஒரு இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது. தொடக்கக் காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகியவை இங்கு ஆதிக்கம் செலுத்தின.
1962-இல் திமுக முதன்முறையாக இங்கு கால் பதித்தது. அதன்பிறகு, 1977-இல் அதிமுக உருவானது முதல் பெரம்பலூர் மாவட்டம் திராவிடக் கட்சிகளின் கோட்டையாக மாறியது. குறிப்பாக 1977 முதல் 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றியைப் பதிவு செய்துள்ளன. 1989-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இங்கு ஒருமுறை வெற்றி பெற்று தனது முத்திரையைப் பதித்தது. தற்போதைய சூழலில், பெரம்பலூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக திமுகவைச் சேர்ந்த ம. பிரபாகரன் உள்ளார். இத்தொகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருந்தாலும், வெற்றியைத் தீர்மானிப்பதில் உடையார் மற்றும் முத்தரையர் சமூகத்தினரின் வாக்குகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன
குன்னம் தொகுதி ; பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான குன்னம், விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட பகுதி. 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவான இத்தொகுதி, ஒவ்வொரு தேர்தலிலும் விறுவிறுப்பான அரசியல் களத்தைக் கண்டுவருகிறது. சுமார் 2.70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், வன்னியர், உடையார் மற்றும் முத்தரையர் சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியச் சக்திகளாக உள்ளனர்
2011-ஆண்டு இங்கு முதல் தேர்தல் நடைபெற்றது. திமுகவின் சிவசங்கர் வெற்றி பெற்றார். 2016-ஆம் ஆண்டு அதிமுகவின் ஆர்.டி.(D) ராமச்சந்திரன் வென்றார். 2021-இல் மீண்டும் திமுகவின் சிவசங்கர் வெற்றியை ஈட்டினார்.

