தாம்பரம்: பிரியாணிக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு அடி உதை.. இளைஞர்கள் அட்டூழியம்!
சென்னை தாம்பரம் அருகே சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஊழியரை இளைஞர்கள் அடித்து உதைத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தாம்பரம் அடுத்த கடப்பேரியில் ராஜகோபால் என்பவர் பிரியாணி கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு ஆட்டோவில் மது போதையில் வந்த இளைஞர் ஒருவர், பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்தவுடன் பணம் கொடுக்காமல் வெளியே சென்ற அவரிடம் ஊழியர் சங்கர், பணம் கேட்டுள்ளார்.
பணத்தை கொடுத்த பிறகு ‘காசு கேட்கிறாயா? நான் யார் தெரியமா?’ என்கிற தோணியில் மிரட்டிவிட்டு ஆட்டோவில் வேகமாக சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஒரு கூட்டத்துடன் மீண்டும் வந்த அதே இளைஞர், ஊழியர் சங்கரை தாக்கினார். இதில் காயமடைந்த சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கையோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தாம்பரம் காவல்துறையினர் வெங்கடேஷ் மற்றும் உதயா ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இந்நிலையில் ஊழியர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.