தமிழகத்தில்தான் வாக்குக்கு காசும், இலவச அறிவிப்பும் கொடுக்கப்படுகிறது..! - சீமான்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு சூடுபிடித்துள்ள நிலையில், நீலாங்கரையில் வாக்களித்த சீமான், இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பது ஜனநாயக நம்பிக்கையை உயர்த்துவதாகக் கூறினார். பேருந்து, வானூர்தி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும், ஆட்சியை அமைப்பது மக்களின் முடிவு என்றும் வலியுறுத்தினார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று பரபரப்பாக நடந்துவருகிறது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குசதவீதம் அதிகமாக இருப்பது ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் அவருடைய மனைவி உடன் வந்து வாக்கினை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு பொதுமக்கள் ஆர்வமாக வந்து செலுத்தும் போது இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்த செல்கிறார்கள். முனைப்பாக இருப்பதை பார்க்கும்போது பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது. ஜனநாயகத்தின் மீது இந்த தலைமுறையின் பிள்ளைகள் வைத்துள்ள பிடிப்பு வாக்கின் வலிமை பெரியளவு மகிழ்ச்சி இருக்கிறது. பேருந்து கட்டண உயர்வை தவிர்த்து இருக்க வேண்டும். வானூர்தி கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்டவைகளை குறைத்திருக்க வேண்டும். நான் இப்பொழுது காரைக்குடி செல்ல இருக்கிறேன் எனது தொகுதியில் வாக்குப்பதிவு எப்படி நடைபெறுகிறது என்பதை பார்க்க உள்ளேன் என கூறினார்.
நடிகர் அஜித் முன்கூட்டியே வாக்கு செலுத்து அனுமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிலளித்த சீமான், அது ஒன்றுமில்லை எப்படியும் செலுத்த வேண்டும். அதிகாரிகள் வந்தால் செலுத்தி விட்டு செல்லலாம். ஒட்டுமொத்தமாக ஆட்சி அமைக்க வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த களத்தில் நிலத்தில் மொத்த அரசியலை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். இந்த அமைப்பை புரட்டிப் போட வேண்டும். ஓட்டுக்கு காசு தர மாட்டேன். உண்மை, நேர்மை வேண்டும். இங்கு அனைத்துக் கட்சிகளும் இலவசங்களை அறிக்கை விட்டு ஓட்டுக்கு காசு கொடுக்கிறது. மக்களை திராவிட கட்சி அரசியல் நாசம் செய்கிறது. அண்ணா காங்கிரஸ் ஓட்டுக்கு காசு கொடுக்கிறது என சொல்லி இருக்கிறார். அப்போது ரூ.2 கொடுக்கப்பட்டது, இப்போது ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது என்று பேசினார்.
