“திமுக 7வது முறையாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை” - சீமான்
பழ. நெடுமாறனுக்கு பதில்
புதுக்கோட்டையில் கட்சியின் நிர்வாகியின் இல்ல நிகழ்வில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பெரியார் பற்றி பேசும்போது பார்த்து பேச வேண்டும் என்று கூறும் பழ நெடுமாறன்தான் பார்த்து பேச வேண்டும். பெரியாருடைய கொள்கைதான் பெண்களை பிரபாகரன் படையில் சேர்க்க பிரபாகரனைத் தூண்டியது என்றால், பெரியாரிடம் இருந்தே நேரடியாக தேர்தல் களத்தில் நின்ற அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் ஏன் அதனை நிறைவேற்றவில்லை? தற்போது இதுபோன்ற கருத்துக்களை கூறும் பழ நெடுமாறன் பல்வேறு புத்தகங்கள் எழுதிய போது ஏன் அதனை கூறவில்லை? பிரபாகரன் போராடிக் கொண்டிருக்கும் பொழுது இதனை பதிவு செய்து இருக்கலாமே...
என்னை பார்த்து அவர்கள் பதட்டம் அடைகிறார்களா இல்லை அவர்களைப் பார்த்து நான் பதட்டம் அடைகிறேனா? உலகத் தமிழினம் என்னை மன்னிக்காது என்று பழ நெடுமாறன் கூறியுள்ளார்.. உங்களை மன்னிக்கின்ற தமிழினம் என்னை மன்னிக்காதா?
நான் யாரிடமாவது ஆதரவை கேட்டேனா?
பிரபாகரனை கடுமையாக விமர்சனம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர் பழ நெடுமாறன். இறுதிப் போரின் போது திமுகவும் காங்கிரசும் துணை நின்றார்கள் என்று பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி விட்டு இதே திமுக காங்கிரசுக்கு 2024 தேர்தலில் ஆதரவு அளித்த பழ நெடுமாறனை உலகத் தமிழ் மக்கள் மன்னித்தார்கள் என்றால் என்னை மன்னிக்க வேண்டாம். 'பிரபாகரனை தற்போதுதான் சந்தித்து வந்தேன்; ஐந்தாம் கட்ட ஈழப் போர் தொடங்க உள்ளது' என கூறிய பழ நெடுமாறனை மன்னிப்பார்கள் என்னை மன்னிக்க வேண்டாம்..
பெரியார் பற்றி நான் பேசுவதற்கு யாரிடமாவது ஆதரவை நான் கேட்டேனா? உலக நாடுகள் எதிர்த்து நிற்கும் போது தனியாக நின்று போரிட்ட பிரபாகரனின் மகன் நான். நீங்கள் எத்தனை கூட்டணியை வேண்டுமானாலும் அழைத்து வந்து என்னை வென்று பாருங்கள்.
திராவிடனுக்கு ஒரு தலைவன்தான். தமிழனுக்கு எண்ணிலடங்கா தலைவர்கள் இருக்கிறார்கள். பெரியாரைப் பற்றி பேசுவதற்கு அனைத்து கட்சிகளும் எதிராக இருப்பதை நான் ஏற்கிறேன் வரவேற்கிறேன்.. பெரியாருடைய பிராமண எதிர்ப்பை ஏற்கிறவர்களாக இருந்தீர்கள் என்றால் ஏன் பிராமண பெண்ணின் தலைமையை ஏற்று அம்மா அம்மா என்று கும்பிடு போட்டீர்கள்...? பெரியார் சொன்னதை திராவிட கட்சிகள் செய்ததா..? பார்ப்பன எதிர்ப்பு என்று சொன்ன பிராமண பெண்தான் ஆதித்தமிழன் ஒருவரை பொது தொகுதியில் திருச்சியில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார். பெரியார் எதிர்த்தது பிராமண பெண்தான். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக நிறுத்தி அனைவரையும் எழுந்து நிற்க வைத்தது பிராமண பெண்தான்.
அடித்தளம் ஆடத்தான் செய்யும்
பெரியாரை ஆதரித்து பேசினேன்தான். நான் அதனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், தற்போது தலை வலிக்கிறது மாத்திரை போடுகின்றேன். பெரியாரை நான் புள்ளி அளவிற்குதான் விமர்சித்து பேசியுள்ளேன். என்னை விட ஆயிரம் மடங்கு விமர்சித்து பேசியது பேரறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்தான். அதற்கான சான்றுகளை எடுத்து தருகிறேன்.
திமுக 7வது முறையாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. உண்மையையும் நேர்மையும் எடுத்துக்கொண்டு வலுவான கருத்து வைக்கும் போது சில சலசலப்புகள் ஏற்படத்தான் செய்யும். ஏற்கனவே உள்ள ஒரு கோட்பாட்டையும் மரபையும் தகர்த்து, புதிய ஒரு கோட்பாட்டை கட்டமைப்பை கட்டமைக்க நினைக்கும் போது அதை ஏற்பார்கள், எதிர்ப்பார்கள் ஆதரிப்பார்கள், அருவருப்பார்கள், விமர்சிப்பார்கள் என்றெல்லாம் அச்சப்படக்கூடாது. அதை துணிந்து செய்கிறவனுக்குத்தான் ஒரு போர் வீரனுக்கு உள்ள துணிவும் வீரமும் தேவைப்படுகிறது. அப்படி நின்றவன்தான் உலகெங்கிலும் உள்ள மாறுதல்களை கொண்டு வந்திருக்கின்றான். இதான் வரலாறு. அப்படிதான் நாங்கள் கட்டமைத்துக் கொள்கிறோம். நீங்கள் கட்டமைத்துள்ள திராவிடம் இந்தியம் என்ற கோட்பாடுகளை தகர்த்து உண்மையாக இருக்க வேண்டிய, இருந்திருக்க வேண்டிய தமிழ் தேசியக் கோட்பாட்டை இந்த நிலத்தில் கட்டமைக்கும் பொழுது அடித்தளம் ஆடத்தான் செய்யும் அதற்கு எதுவும் நான் செய்ய முடியாது.
திரும்பத் திரும்ப கூறி வருகிறேன். பெரியார் மண், பெரியார் மண் என்று யாரும் பேச வேண்டாம். இது சேர, சோழ, பாண்டியன் மண். வருகிறவர் போகிறவர்கள் எல்லாம் பெரியார் மண், பெரியார் மண் என்று கூறினால் கொலைவெறி வந்து விடும் எனக்கு. எங்களுக்கு பெரியார் மண் இல்லை பெரியாரே மண்தான்” எனத் தெரிவித்துள்ளார்.