புதுச்சேரியில் பிரபல வங்கியின் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரு கும்பல், புதுச்சேரியில் உள்ள ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை திருடி வந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து கோடி கணக்கிலான பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் மீண்டும் ஏஎடிம் கொள்ளை அறங்கேறத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திடீரென மாயமாகி வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தாலும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுப்பதில்லை என்பது, பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனிடையே புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்றில் ஒருவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்ட் பதிவு செய்யும் பகுதியில், மர்ம அட்டை ஒன்று ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த அட்டையை எடுத்து பார்த்தபோது, அதில் மெமரி கார்டு, சிப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தது தெரியவந்தது.
உடனே அதை வீடியோவாக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். இதைப்பார்த்து அதிர்ந்துபோன வங்கி அதிகாரிகள் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு புதுச்சேரி மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே ஏடிஎம் மையங்களில் இருந்து பொதுமக்களின் பணம் பல கோடி ரூபாய் திருடுப்போன சம்பவம் போல் மீண்டும் நடைபெறாமல் இருக்க, காவல்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.