விபரீத முடிவெடுத்த மாணவன்... எரிக்கப்பட்ட பள்ளிப் பேருந்துகள்; நெல்லையில் பரபரப்பு!
நெல்லை மாவட்டம் வீரநல்லூர் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் சபரி கண்ணன். கடந்த 7 ஆம் தேதி அப்பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது மாணவன் சபரிகண்ணனை ஆசியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்தநாள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வரும்படியும் கூறியுள்ளனர்.
ஆனால் , தனது பெற்றோரை அழைத்து வராத சபரிகண்ணன் பள்ளியின் வளாகத்திலேயே வைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாணவன் சபரிகண்ணன் மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் மாணவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த சபரிக்கண்ணன் நேற்று உயிரிழிந்தார். மாணவர் உயிரிழந்ததை கண்டித்து , வீரநல்லூர் காவல்நிலையத்திற்கு முன்பு மாணவனின் உடலோடு 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாணவனின் இறப்பு காரணமான ஆசியர்கள், நிர்வாகத்தில் உள்ள சிலர் என்று 5 பேர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருநெல்வேலி பாபநாசம் சாலையில் 20 நிமிடம் பாதிப்பு ஏற்பட்டது.
இதன்பின்னர், போலிஸார் அவர்களை சமாதானப்படுத்திய நிலையில், நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவம் முடிந்தபின்னர், நள்ளிரவில் இறந்த மாணவனின் உறவினர்கள் பள்ளியின் இரண்டு வாகனங்களை எரித்தாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..!
தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட 104, 044-24640050 என்ற எண்ணை அழைக்கலாம்