சேலம் | டிராக்டர் மீது சரக்கு வேன் மோதிய விபத்து – நண்பர்கள் இருவர் உயிரிழந்த சோகம்
செய்தியாளர்: S.மோகன்ராஜ்
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா துட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ ;(44). இவரது நண்பரான மேட்டூர் தாலுகா தெற்கத்தியூரைச் சேர்ந்த நரசிம்மன் (43), ஆகிய இருவரும் டிராக்டரில் சேலத்தில் இருந்து கோயமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கலியனுர் பிரிவு என்ற இடத்தின் அருகே வந்த போது பின்னால் வந்த சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டரில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேன் ஓட்டுநர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தீபக் (23) என்பவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார், விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் பிரேத கிடங்கில் வைத்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.