சேலம் | சாதிமறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி.. காவல் நிலையத்தில் தஞ்சம்!
செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெட்ரோல் பங்கில் வேலை செய்துவரும் இவரும், பொட்டியபுரம் கருத்தானூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்துவரும் துர்காதேவி என்பவரும் கமலாபுரம் அரசு பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து காதல் ஜோடியின் பெற்றோரை அழைத்து போலீசார் சமாதானம் செய்தனர் அப்போது, சாதி மறுப்பு திருமணத்திற்கு இருதரப்பும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டதை அடுத்து காதல் ஜோடியை பொற்றோருடன் அனுப்பி வைத்தனர். இரு தரப்பு உறவினர்களும் காவல் நிலையத்தில் குவிந்ததால் அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.