ஜெயலலிதா மரண விசாரணை புகார் வழக்கு: நாளை உத்தரவு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடுமாறு தொடரப்பட்ட வழக்கின் விசாரனையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த மே மாதம் வழக்கறிஞர் செல்வவிநாயகம், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதனை விசாரிக்க வேண்டும். சசிகலா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்தப் புகாரை காவல்துறையினர் ஏற்கவில்லை எனவும் காவல்துறையினர் விசாரிக்க உத்தரவிடுமாறும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செல்வவிநாயகம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி மேகலா முன்பு விசாரணக்கு வந்தது. அப்போது, காவல்நிலையத்தில் யார் புகார் கொடுத்தாலும் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் வழக்கை பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதைக்கேட்ட நீதிபதி, நாளை இவ்வழக்கு தொடர்பாக உத்தரவிடப்படும் எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.