சென்னை: மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் வெடித்த மக்கள் போராட்டம்!
சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நடந்து சென்ற இளைஞர் மீது ஜன்னல் சிலாப் இடிந்து விழுந்ததில், இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சையத் குலாம். இவர் தனது எலெக்ட்ரிசியன் வேலையை முடிந்து பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வழியாக நேற்று தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 133 வது பிளாக் குடியிருப்பு அருகே வரும் போது அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்த ஜன்னல் சிலாப் இடிந்து சையத் குலாம் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மீட்டு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் சையத் குலாம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சையத் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் பட்டினம்பாக்கம் போலீசார் சையத் குலாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜன்னல் சிலாப் இடிந்து விழுந்து சையத் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்கள் பலரும் இன்று காலை பட்டினம்பாக்கம் லூப் சாலை, ஸ்ரீனிவாசபுரம் சாலை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300 க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்ததால் பரப்பரப்பு எற்பட்டது.
போராடியவர்கள், “அப்பகுதி மக்களுக்கு புது வீடுகள் கட்டிதர வேண்டும்” என போராட்டம் நடத்தி வந்ததால் மைலாப்பூர் எம்.எல்.ஏ வேலு, மைலாப்பூர் காவல் துணை ஆணையர் ஹரிஹிரண் பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வாரத்தையில் ஈடுப்பட்டனர். சுமார் 9 மணியில் இருந்து 11:30 மணி வரை மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் மறியலில் ஈடுபட்டுள்ள உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இப்போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ரூ.5 லட்சத்தை நிவாரணமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை-பட்டினப்பாக்கம் - சீனிவாசபுரம் திட்டப் பகுதியில் ஏற்பட்ட கட்டட விபத்தில் இயற்கை எய்திய திரு.சையத் குலாப் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5.00 இலட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது” என குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-1977 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 60 ஆண்டு நீண்ட கால பயன்பாட்டாலும் தட்ப வெட்ப மாறுப்பாட்டாலும் கட்டடம் சிதலமடைந்த நிலையில் இருந்தது.
தொழில் நுட்ப வல்லுநர் குழுக்களை கொண்டு ஆய்வு செய்ததில் இக்கட்டடங்களை அகற்றிவிட்டு மறுகட்டுமானம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில் 20.01.2022 மற்றும் 09.03.2022 ஆகிய நாட்களில் குடியிருப்புகளை காலி செய்ய வாரியத்தால் அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டது.
மேலும், 08.07.2022 அன்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையிலும் 18.09.2022 அன்று தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையிலும் 09.09.2024 வாரிய கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலும் மற்றும் 23.09.2024.06.11.2024 மற்றும் 11.11.2024 ஆகிய நாட்களில் வாரிய நிர்வாகப் பொறியாளர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கிராம மீனவர் சபையினருடன் பேச்சு வார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
இந்த கூட்டங்களில் குடியிருப்பை காலி செய்வதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் நேற்று (04.12.2024) இரவு 134-வது பிளாக் மூன்றாம் தளத்தில் ஜன்னலின் சன்ஷேட் இடிந்து விழுந்ததில் திரு.சையத் குலாப் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
அன்னாரது குடும்பத்திற்கு அரசின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு ரூ.5.00 இலட்சம் நிவாரண நிதியாக வாரியத்தின் மூலம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு வாரியத்தால் புதிய குடியிருப்புகள் கட்டி குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும். இடைப்பட்ட காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ. 24,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் அமைச்சர்.