
திருநெல்வேலியில் இருந்து புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன், ஒளிப்பதிவாளர்கள் சங்கர் மற்றும் நாராயணன் நியூஸ்7 தமிழில் ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் உள்ளிட்டோர் கடந்த ஆக.23-ம் தேதி சந்திராயன் 3 தொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தனர். செய்தி சேகரித்துவிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து இரவில் வீடு திரும்பினர்.
அப்போது நள்ளிரவில் நாங்குநேரி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், புதிய தலைமுறையின் திருநெல்வேலி மண்டல ஒளிப்பதிவாளர் சங்கர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த சங்கரின் குடும்பத்திற்கு புதிய தலைமுறையின் சார்பில் 34 லட்சம் ரூபாய் நிதி தற்போது வழங்கப்பட்டது.
இந்த நிதியை சங்கரின் மனைவி லட்சுமியிடம் புதிய தலைமுறை குழுமத் தலைவர் சத்திய நாராயணன் வழங்கினார். நிறுவன காப்பீட்டு திட்ட நிதி, ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் மற்றும் புதிய தலைமுறையின் பங்களிப்பு என மொத்தம் 34 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
அதோடு, செய்தியாளர் சங்கரின் மகன் முத்து இசக்கியின் கல்விச் செலவை புதிய தலைமுறை அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.