சமூக நீதித்துறை பெயர் மாற்றம்.. மறுபரிசீலனை வேண்டும் - எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்!
தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு சமூக நீதித் துறை என்று பெயர் மாற்றம் செய்திருப்பதை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். தான் நடத்திவரும் ‘தலித்’ இதழில் இந்தப் பெயர் மாற்றத்தை எதிர்த்து எழுதப்பட்ட தலையங்கத்தை ரவிக்குமார் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தத் தலையங்கத்தில் ஆதி திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் அல்ல என்று ரவிக்குமார் கூறியுள்ளார். இது 1922இல் நீதிக் கட்சி ஆட்சியில் எம்.சி. ராஜா, இரட்டைமலை சீனிவாசன் போன்ற பட்டியல் சாதித் தலைவர்கள் போராடிப் பெற்ற சாதி கடந்த, சமயச் சார்பற்ற அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 'சமூக நீதித் துறை' என பெயரை மாற்றும்போது பட்டியல் சாதி மக்களுக்கான தனித்துவமான கவனம், நிதி மற்றும் திட்டங்கள் பிற பிரிவினரோடு கலந்து நீர்த்துப்போகும் ஆபத்து உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், அமைச்சரவை பெயர் மாற்றம் குறித்து ஜூலை 4 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விசிக துணைப் பொதுச் செயலர் கௌதம சன்னா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரம், அக்கட்சியின் மற்றொரு துணைப் பொதுச் செயலர் வன்னி அரசு, தவெக கூட்டணி அரசின் சமூக நீதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

