ராமேஸ்வரம் | இலங்கை தமிழர்கள் 5 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் - போலீசார் விசாரணை
செய்தியாளர்: அ.ஆனந்தன்
இலங்கை கண்டி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் வாழ வழியின்றி நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் பைபர் கிளாஸ் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல் முனை வடக்கு கடற்கரையில் வந்திறங்கினர்.
இதனையடுத்து மீனவர்களின் தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார், மயக்க நிலையில் இருந்த குழந்தைகளுக்கு குடிநீர் மற்றும் பால் வழங்கி அவர்கள் ஐந்து பேரையும் தனூஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கையில் பால் பவுடர், மருந்து வகைகள் குழந்தைகளுக்கான உணவு மற்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது,
வேலைவாய்ப்பு இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், வாழ்வதற்கு வழியில்லாததால் கழுத்து, மற்றும் குழந்தைகளின் நகையை விற்பனை செய்து உயிர்பிழைத்தால் போதும் என உறவுகளை இழந்து தனுஷ்கோடி வந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.