ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 17 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், மீனவர்கள் நள்ளிரவில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னார்க்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அருள் தினகரன் (24), மாதவன் (22), அந்தோணி ஈசாக் (19), டேவிட் (50), கார்த்திகேயன் (27) உள்பட 17 மீனவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைக்குப் பின்பு மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் நடுக்கடலில் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.