புதுக்கோட்டை | காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்து – நண்பர்கள் இருவர் உயிரிழப்பு
செய்தியாளர்: நீதி அரசன் சாதிக்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கம்மங்குடிபட்டியைச் சேர்ந்த கென்னடி நாதன் (30) என்பவரும் அவரது நண்பரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்துரை (28) என்பவரும் திருமயத்தில் உள்ள பெல் நிறுவன உணவகத்தில் ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர்
இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்துவிட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருமயத்தில் இருந்து மணவாளங்கரை என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கடியாப்பட்டி சாலையில் இருந்து திருமயம் நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் காரை ஓட்டி வந்த கோபால கிருஷ்ணன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த திருமயம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.