ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் - உயர் சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் அனுமதி
செய்தியாளர்: ச.குமரவேல்
கடந்த 6-ம் தேதி திருப்பூரில் இருந்து சித்தூருக்கு ரயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண், ஹேமராஜ் என்பவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து நான்கு மாத சிசு நேற்று (08.02.2025) உயிரிழந்தது. இதனை தொடர்ந்து அவர் உயர் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு வயிற்றில் உயிரிழந்த சிசுவை அகற்றுவதற்க்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து சிறப்பு மருத்துவக் குழுவினர் பரிசோதனைக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் அரசு செய்து வருவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.