கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் புதிய திருப்பம்.. ஏ1 அக்யூஸ்டாக ஸ்ரீமதியின் தாய்? காரணம் என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி ஜூலை 17ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திடீரென கலவரமாக வெடித்தது. அப்போது, பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது. இதனால், பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது தொடர்பாக 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மாணவியின் தாய்..
மேலும் இச்சம்பவத்தில் ஏ1 குற்றவாளியாக பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 53 சிறார்கள் உட்பட 666 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர். பள்ளி வளாகம் முன்பு போலீஸ் வாகனம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 124 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். மாட்டின் கொம்பை பறித்த வழக்கில் 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மேலும் கலவரத்தின் போது ஐஜி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்கிய சம்பவம் தொடர்பாக 121 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதன் மூலம் நான்கு பிரிவுகளின் கீழ் இந்த கலவரம் தொடர்பாக 916 பேர் மீது வழக்குபதிவு செய்து இந்த 4 வழக்குகள் தொடர்பாக 41,250 பக்கங்கள் அடங்கிய இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது மகளுக்கு நீதி வேண்டும் என தொடர்ந்து போரடி வந்த ஸ்ரீமதியின் தாயார் ஏ1 குற்றவாளியாக சேற்கப்பட்டுள்ளா சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.