“ஆளுநர் மாளிகை தரப்பு புகாரில் தெரிவிக்கப்பட்டவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை” - தமிழக காவல்துறை

ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் காவல்துறை தலைமை இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்pt web

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசியதாக கருக்கா வினோத் என்ற ரவுடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கைதான கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். காவல் துறையினரின் முதல்கட்ட தகவல் அறிக்கையில், ரவுடி வினோத் வீசிய பெட்ரோல் குண்டு அதிக சத்தத்துடன் எரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகைpt web

குண்டுவீசி விட்டு தப்பி ஓடும் சமயத்தில் பிடிப்பதற்காக விரட்டிய போது, ரவுடி வினோத், காவல் துறையினர் மீது மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் காவல்துறை எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான ரவுடி வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டு வீசப்பட்டது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல்வேறு கட்சித் தலைவர்கள் சட்டம் ஒழுங்கு குறித்து திமுக அரசுக்கு தங்களது கண்டங்களை தெரிவித்திருந்தனர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இது குறித்தான விளக்கம் அளித்திருந்தார்.

டிஜிபி சங்கர் ஜிவால்
டிஜிபி சங்கர் ஜிவால்புதிய தலைமுறை

இந்நிலையில் காவல்துறை தலைமை இயக்குநர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “25-10-2023 அன்று நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் (Bentry) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிறும் புறம்பானது.

அதேபோல் ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது. ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்றபின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலைவில் வீசினர். அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்திற்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன.

ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பிற்காக சர்தார் படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாறும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாகக் குற்றவாளி கைதுசெய்யப்பட்டார். மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும். மேதகு ஆளுநர் அவர்களுக்கும் மற்றும் அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com