தொடர் கன மழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை - பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
செய்தியாளர்: இரா.சரவணபாபு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நூறு அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் நேற்று முன் தினம் 78 அடியாக இருந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொளளவை எட்டியுள்ளது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்மட்டத்தை 97.5 அடியாக நிலை நிறுத்தி பராமரிக்கும் விதமாக அணைக்கான தற்போதைய நீர்வரத்தான வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதையடுத்து பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இதன் கரையோர பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.