“ஏன் சாதி ரீதியான பாட்டு போடுறீங்க..?” - கேள்விகேட்ட திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
ராமநாதபுரம் அடுத்த வழுதூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவில், வரவு செலவு கேட்டது தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது. அத்துடன் இன்னிசை நிகழ்ச்சியில் ஜாதி ரீதியான பாடல் பாட கூறியதற்கு திமுக நிர்வாகி சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக திமுக ஐடி விங் ராமநாதபுரம் ஒன்றிய அமைப்பாளர் கௌதம் என்பவருக்கும், குற்ற சரித்திர பதிவேடு உள்ள நபரான பிரபு என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை முன்விரோதமாக வைத்து திமுக நிர்வாகி கௌதம் வீட்டில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்..
திருவிழா நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நேற்று நள்ளிரவு பிரபு (35), அலெக்ஸ் (36) உள்ளிட்ட 5 நபர்கள் கௌதம் என்பவரின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தவர்களை மிரட்டியும், கற்களை எரிந்து வீட்டின் கண்ணாடிகளை சேதப்படுத்தியும் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த கேணிக்கரை போலீசார் சம்ப இடத்தில் விசாரணை செய்து புகார் அளிக்க வருமாறு அறிவுறுத்தி சென்ற நிலையில், மீண்டும் நள்ளிரவு அதே நபர்கள் கௌதம் வீட்டில் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதில் வீட்டில் முன்பி வைக்கப்பட்டிருந்த சோபா, ஜன்னல் மற்றும் கதவு ஆகியவை எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.