ஆம்பூர்| அதிமுக பேனர் விழுந்து பள்ளி மாணவன் உட்பட இருவர் காயம்!
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் திருப்பூர் மாவடத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ள எடப்பாடி பழனிசாமிக்காக, அதிகமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்த பேனர் காற்றில் விழுந்ததால் பள்ளி மாணவன் மற்றும் அவரது தந்தை காயமடைந்தனர்.
அதிமுக பேனர் விழுந்து இருவர் காயம்..
திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 13, 14ஆம் தேதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்பதற்காக அதிமுக நிர்வாகிகள் ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மிகப்பெரிய பேனரை ஒட்டி வைத்திருந்தினர்.
இந்நிலையில், பலத்த காற்றில் பேனர் கிழிந்து, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை- மகன் மீது விழுந்துள்ளது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.