மத்திய அரசுக்கு ஓபிஸ் கண்டனம்
மத்திய அரசுக்கு ஓபிஸ் கண்டனம்முகநூல்

மத்திய அரசுக்கு ஓபிஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Published on

அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என, ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார். ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு எல்லாம் அனுமதி கிடைத்தது. ஆனால், மூன்று முறை தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்-ற்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தநிலையில், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “ மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின் இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமக்ரா சிக்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி அவர்கள், தமிழ்நாடு அரசு முன்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 இலட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 இலட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன.

மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவு, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவு மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனை. இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

மத்திய அரசுக்கு ஓபிஸ் கண்டனம்
அறிக்கை எழுதியது நடிகர் விஜயாஅல்லது எழுதி கொடுத்ததில் கையெழுத்து போட்டு இருக்கிறாரா? - கரு.நாகராஜன்

சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுசெயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவர்களின் பட்டியலில் இருந்தவர்தான் ஓபிஎஸ். ஜெயலலித்தாவிற்கு பிரச்னை ஏற்பட்டபோதெல்லாம், இடைக்கால முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம்தான். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடியுடன் கைகோர்த்த ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முக்கிய காரணமாகவும் இருந்தார்.

ஆனால், ஒற்றை தலைமை பிரச்னைக்காரணமாக ஓபிஎஸ்க்கும் இபிஎஸ்க்கும் இடையே பிளவு ஏற்பட, அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பொறுப்புகளிலிருந்தும் நீக்கினார். தற்போதுவரை அதற்கான சட்டப்போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு முயற்சித்தும் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் ஆல் இணைய முடியவில்லை என்பதுதான் உண்மை.

ஓபிஎஸ் இபிஎஸ்
ஓபிஎஸ் இபிஎஸ்முகநூல்

இதனால், பாஜக அணியில் சேர்ந்த ஓபிஎஸ் கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுர தொகுதியில் அதிமுக சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டார். இருப்பினும் அவர் வெற்றிபெறவில்லை. பாஜகவை நம்பி அதிமுகவில் இருந்து வெளியே வந்த ஓபிஎஸ், சமீபத்தில் திருச்சி வந்திருந்த பிரதமர் மோடியை சந்தித்து அனுமதி கேட்டும் அது கிடைக்காத நிலையில் மிகுந்த விரக்தியில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள மதுரை பொதுக்கூட்டத்தில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்றும், விஜய்யுடன் அவர் கூட்டணி சேரலாம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்நிலையில்தான், தமிழ்நாடு கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து அறிக்கையையும் ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com