”சாதி பிரிவினைகள், சமூக படுகொலைகள்”-நா.த.க.வில் இருந்து விலகிய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அறிக்கை!

“வேட்பாளர்கள் சிலரை தவிர பலபேரை எப்போதாவது களத்தில் பார்த்திருக்கிறீர்களா? கட்சிக்குள் சாதி இல்லாமல் செயல்பட முடியாதா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடுகள் உள்ளதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் சில நாட்களாக தவித்து வந்தேன் ”
விலகிய நிர்வாகி அறிக்கை
விலகிய நிர்வாகி அறிக்கைபுதியதலைமுறை

”மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி அமைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த நிலையில், கட்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புடன் எனது அனைத்து நாம் தமிழர் உறவுகளே.. அனவருக்கும் வணக்கம். கடந்த எட்டு ஆண்டுகளாக உங்களுடன் பயணித்த நான் இன்றுடன் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன். நாம் தமிழர் கட்சியில் இரண்டு முறை சட்டமன்ற வேட்பாளர், ஒருமுறை சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆக என்னை நிறுத்தி எனக்காகவும், தமிழ் தேசியத்திற்காகவும் உழைத்த எனது தம்பிகள், தங்கைகளை விட்டு கனத்த இதயத்தோடு பிரிகிறேன். உங்களுடன் நான் பயணித்த காலங்கள் எனது வாழ்வின் முக்கியமான காலமாகவும், இனிமையான வசந்த காலமாகவும் என்னி மகிழ்ச்சி கொள்கிறேன்.

“சாதி பிரிவினைகள்.. சமூக படுகொலைகள்”

நான் உங்களை விட்டு பிரிவது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். வருத்தமடைய செய்யலாம். ஆனால், கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதி பிரிவினைகளும், சமூக படுகொலைகளையும் கண்டு என்னால் இதில் பயணிக்க விருப்பமில்லை. பொதுக்குழு என்ற பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது, நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலாளர், யார் பொருளாளர் என்பதை அறியாமலும், வெளிப்படுத்தாமலும் பயணிக்க விருப்பமில்லை.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான எனக்கே தெரியாமல் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறப்படும் கருப்பையா என்பவர் யார்? கட்சிக்கு என்ன செய்துள்ளார்? நீங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியுமா? வேட்பாளர்கள் சிலரை தவிர பலபேரை எப்போதாவது களத்தில் பார்த்திருக்கிறீர்களா? கட்சிக்குள் சாதி இல்லாமல் செயல்பட முடியாதா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடுகள் உள்ளதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் சில நாட்களாக தவித்து வந்தேன்.

“அண்ணன் விருப்பப்படி செயல்பாடு உள்ளதா?”

பாரதிமோகன், திருமால் செல்வன் போன்றோர் கட்சியின் பொருளாளராகவும், துணைச் செயலாளராகவும் நியமித்து இருப்பதாக கூறப்படுவது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடு உள்ளதா? அண்ணன் அருகில் உள்ள மூன்று பேரை தவிர்த்து நீங்கள் அண்ணனை சகஜமாக பார்க்க முடிகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள். என்னதான் எனக்கு வருத்தம் இருந்தாலும், என்னை சீமான் அவர்கள் 8 ஆண்டுகளாக கண்ணியமாக நடத்தி, எனக்குரிய மரியாதையை எனக்கு கொடுத்து சிறப்பித்தமைக்கு என்றைக்கும் நன்றியுணர்வோடு இருப்பேன். தமிழ் தேசியம் ஒருநாள் வெற்றிபெறும்போது மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன். வாழ்க தமிழ் தேசியம். வாழ்க நாம் தமிழர் கட்சி என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்குமரனின் நீக்கமும்.. பதிலும்!

சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் மதுரை மண்டலத்தில் முக்கிய முகமாகவும், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த வெற்றிக்குமரனை கட்சியில் இருந்து நீக்கியது தலைமை.

அதற்கு பதில் அறிக்கை விட்ட வெற்றிக்குமரன், “நாம் தமிழர் கட்சியின் விதிமுறைகளின் படி, மாநில பொறுப்பில் இருக்கும் என்னை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவை கூட்டித்தான் என்னை நீக்க முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

விலகிய நிர்வாகி அறிக்கை
மாணவர்கள் இனி பள்ளிகளில் இலவசமாக ஆதார் பதிவு செய்யலாம் – தமிழகத்தில் இன்று முதல் திட்டம் ஆரம்பம்

புகழேந்தியின் விலகல்!

தொடர்ந்து, கடந்த மாதம், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த புகழேந்தி மாறன் கட்சியில் இருந்து விலகினார். விலகலின்போது ஃபேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவிட்ட அவர், “அண்ணன் சீமான் அவர்களின் வார்த்தை மட்டும் தான் அரசியல் என நம்பி தொலைத்த நாட்கள் தான் அதிகம். அனுபவங்கள்தான் வாழ்க்கை பாடமாகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இப்படி நிர்வாகிகளின் அடுத்தடுத்த விலகில், கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் அமலாக்கத்துறை சோதனை, மறுபக்கம் கரும்பு விவசாயி சின்னம் முடக்கம் என்று கட்சிக்கு தொடர் சிக்கல் எழுந்து வரும் சூழலில் நிர்வாகிகளின் விலகிவருவது பேசுபொருளாக மாறியுள்ளது.

விலகிய நிர்வாகி அறிக்கை
காஞ்சிபுரம்: தனது இரு குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்த வருவாய் கோட்டாட்சியர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com