போயஸ் கார்டன் இல்லத்தின் எந்த அறையும் சீலிடப்படவில்லை - ஜெ.தீபா

போயஸ் கார்டன் இல்லத்தின் எந்த அறையும் சீலிடப்படவில்லை - ஜெ.தீபா
போயஸ் கார்டன் இல்லத்தின் எந்த அறையும் சீலிடப்படவில்லை - ஜெ.தீபா

போயஸ் இல்லத்தின் எந்த அறையும் சீலிடப்படவில்லை என்று போயஸ் இல்லத்திற்குள் சென்று  வந்த பின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெ.தீபா, “ இந்த வீட்டுக்கு வருவதை பெரிய வெற்றியாக பார்க்கின்றேன், அத்தை இறந்தபோது கூட உள்ளே என்னை விடவில்லை. ஜெயலலிதா வாழ்ந்த போது இருந்த வீட்டுக்கும், இப்போது இருக்கும் வீட்டுக்கும் நிறைய மாற்றம் உள்ளது. சசிகலா கூட  இந்த வீட்டை மாற்றி இருக்கலாம், ஜெயலலிதா வாழ்ந்த வீட்டுக்கு என்று ஒரு அடையாளமும் இப்போது இல்லை, இந்த வீடு வாழ்வதற்கு ஏற்றார் போல் இல்லை” என தெரிவித்தார்

2017 ல் இந்த இல்லத்தின் ஒரு அறை ரெய்டு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ அனைத்து அறைகளையும் பார்த்தேன், எந்த அறையும் சீலில் இல்லை, அதிகாரிகள் அனைத்து அறைகளையும் காட்டினார்கள். இந்த வீட்டிற்காக முன்பு இருந்த அரசு கொடுத்த 67கோடி ரூபாய் கோர்ட்டில் தான் உள்ளது. ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை துவங்க வேண்டும் என்று தான் நீதிபதி சொல்லி உள்ளார். ஆனால், இந்த வீட்டை அறக்கட்டளை ஆக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் தீர்ப்பில் சொல்லவில்லை.

இந்த வீட்டை கடந்த அதிமுக அரசுதான் நினைவு இல்லமாக அறிவித்தது, இதற்காக அதிமுக மேல்முறையீட்டுக்கு சென்றால் நீதிமன்றத்தில் அதனை சட்ட ரீதியாக சந்திப்போம். இப்போதைய தமிழக அரசு இந்த வீடு தொடர்பாக மேல்முறையீடு செய்யாது என நம்புகிறேன். ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் உள்ளது, தமிழக அரசு அதனை விசாரணை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

சசிகலா இந்த வீட்டை உங்களிடமிருந்து வாங்கி விடுவார் என்ற பேச்சு உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த தீபா, “ இது என்ன கத்தரிக்காய் வியாபாரமா. யாருக்கு விற்றாலும் பதிவு செய்ய வேண்டுமல்லவா, அப்போது எல்லோருக்கும் தெரிய வருமே” என கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com