ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு?... தமிழகத்தில் மேலும் 4 பேர் கைது !
தேசிய புலனாய்வு முகமை!
இந்தியாவில் தீவிரவாத செயல்பாடுகளை கண்காணித்து, அதைத் தடுக்க என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவை குண்டுவெடிப்பு சம்பவம்
இந்தவகையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த புகாரில், மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிரடியாக கைது செய்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் கோட்டை ஈஸ்வரர் கோயில் அருகே திடீரென கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்டதால் அப்போதே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
நான்கு பேர் அதிரடி கைது
இச்சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் சில இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு அனுப்ப முயன்றது தெரியவந்தது.
இந்நிலையில் கோவை அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அலி, அதே கல்லூரியில் பணியாற்றும் ஜவஹர் சாதிக் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதேபோல் பழனி நெய்க்காரபட்டியை சேர்ந்த ராஜா முகமதுவும் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கடந்த 2022ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்ட நிலையில், தற்போது ராஜா முகமது கைதாகியுள்ளார். மேலும் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ஷேக் தாவூத் என்பவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளாக நடைபெறும் விசாரணை!
என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கைக் கடந்த 3 ஆண்டுகளாக விசாரித்து வரும்நிலையில், இந்த வழக்கில் இதுவரை ஏற்கனவே எட்டு பேர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே தற்போது கூடுதலாக நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாகச் சென்னை, கோவை, திண்டுக்கல் நகரங்களைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.