நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்..
கண்ணியமான பேச்சுக்கும் கணீர் தமிழுக்கும் அறியப்பட்டவரான இல.கணேசன் பாஜகவுக்கு தமிழ் முகம் கொடுக்க தலைப்பட்டவர். ஆர்.எஸ்.எஸ்ஸில் பணியாற்றி, தொடர்ந்து பா.ஜ., தேசிய செயலர், துணைத்தலைவர், தமிழக பா.ஜ., தலைவர், ராஜ்யசபா எம்.பி.,என பல்வேறு பதவிகளை வகித்தவர் இல.கணேசன்.
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டில் இருந்து வந்த இல கணேசன், குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, வீட்டில் கழிவறையில் வழுக்கி விழுந்ததாகவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்தபடியே தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் தலைவலி அதிகமான நிலையில், கடந்த 8ஆம் தேதியன்று சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போதைய தமிழ்நாடு பாஜக அதன் அடித்தளத்தில் இருந்து எப்படி உருவாகி வந்தது என்பதற்கு நேரடி சாட்சியங்களில் ஒருவராக இருந்தவர் இல.கணேசன். தஞ்சாவூரில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் இலக்குமிராகவன் - அலமேலு தம்பதியின் 9 குழந்தைகளில் 7ஆவது குழந்தையாகப் பிறந்தவர் இல.கணேசன்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் அண்ணன்களின் அரவணைப்பில் வளர்ந்தார். 5 வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாஹா பயிற்சி வகுப்பில் பங்கேற்கத்தொடங்கிய கணேசன், அந்த அமைப்பின் மேல் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக திருமணம் செய்யாமலும், தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேர செயல்பாட்டாளராக பொதுவாழ்விற்கு வந்தார். இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர். இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவை தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் நாகலாந்து மாநில ஆளுநராக மாற்றப்பட்டார்.