நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது ஏன்? இயக்குனர் மு. களஞ்சியம் விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-லும் முந்தைய தேர்தல்களைப் போலவே, நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. முந்தைய தேர்தல்களில் திராவிட சித்தாந்தத்திற்கு எதிராக திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்த நாதக 8 வாக்கு சதவீதத்தை கொண்டிருந்தது. ஆனால், இத்தேர்தலில் அக்கட்சியின் தேர்தல் பரப்புரை வியூகம் முதன்முறையாக தேர்தலை சந்தித்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்ப்பதாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் தனிநபர் தாக்குதல்களும் நடந்தேறின. குறிப்பாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜயை, ’சாலையின் ஓரமாக நிற்க வேண்டும்; இல்லையென்றால்..’ என்ற வகையில் பேசியிருந்தது பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்திருந்தது.
மேலும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர், அரசியல் கட்சிகளின் தலைவர்களை குறிவைத்து கடுமையான வகையில் பேசியதும், அக்கட்சியிலேயே சிலருக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியிருந்ததாக கூறப்பட்டது. இந்தசூழலில் தான், நாம் தமிழர் கட்சியில் உள்ள சிலர் மாற்றுக் கட்சியினர் மீது வெறுப்பரசியலைக் கையாள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்து நாதகவில் 2016-ம் ஆண்டு முதல் பயணித்து வந்த இயக்குனர் மு. களஞ்சியம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமானுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”தற்போது, இயக்கத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாற்று அரசியல் தலைவர்கள், தனிநபர்கள் மீதான விமர்சனங்களின் தரம் குறித்து எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டு. தமிழ்த்தேசியக் கொள்கை என்பது வெறுப்பரசியலைக் கடந்தது; அது அனைவரையும் உள்ளடக்கிய அதிகார மாற்றத்திற்கான கருத்தியல் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்.
ஆனால், அதற்கு நேர்மாறாக கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விமர்சனங்கள் கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் தாக்குதலாக இருக்கக் கூடாது என்பது எனது உறுதியான நம்பிக்கை. குறிப்பாக, நம்மோடு பயணித்தவர்கள் மற்றும் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் மீதான இழிவான விமர்சனங்கள், நாம் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல என்று நான் கருதுகிறேன்.
எனவே, எனது அரசியல் புரிதலும் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்கும் வழிமுறைகளும் கட்சியின் தற்போதைய போக்கிலிருந்து மாறுபடுகின்றன. இருப்பினும், உங்கள் மீதான மரியாதையை நான் எப்போதும் கொண்டிருப்பேன்.
கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என்பதால், நான் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்தும், நாம் தமிழர் கட்சியிலிருந்தும் முறைப்படி விலகிக் கொள்கிறேன். தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் ஒரு தம்பியாக எனது பயணம் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

