\
Minister Srinath went out of his constituency and thanked people which attracted criticism
அமைச்சர் ஸ்ரீநாத்எக்ஸ் தளம்

தொகுதியே தெரியாமல் நன்றி கூறிய அமைச்சர் ஸ்ரீநாத்.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.. #ViralVideo

முன்னதாக, கச்சத்தீவு கருத்து தொடர்பாகவும் அவர் சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published on

அமைச்சர் ஸ்ரீநாத், தொகுதி மாறிச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தவெக, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய் உள்ளார். இந்த நிலையில், அமைச்சர் ஸ்ரீநாத், தொகுதி மாறிச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதலமைச்சர் விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், விஜயின் அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சராக உள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் ஸ்ரீநாத் தனது தொகுதி மக்களிடம் நேரில் நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தார். அப்போது மாறுதலாக, திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட புன்னக்காயல் பகுதி மக்களிடமும் அவர் நன்றி கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தனது தொகுதி எதுவென்றுகூட அமைச்சருக்கு தெரியாதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து அதிமுகவும் விமர்சித்துள்ளது. அதன் ஐடி விங்க் பக்கத்தில், ‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக்கூட அறியாமல், திமுகவைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றிபெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

தனது தொகுதி எல்லை எது என்றுகூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு’எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக, கச்சத்தீவு கருத்து தொடர்பாகவும் அவர் சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com