பொது சிவில் சட்டத்திற்கு திமுக எதிர்ப்பு: அமைச்சர் துரைமுருகன் சட்ட ஆணையத்திற்கு கடிதம்
பாஜகவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருப்பது, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம். இதை நடைமுறைப் படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “இரண்டு விதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்ப பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் எதிர்க்கட்சிகளை பொருத்தவரையில் காங்கிரஸ், திமுக ஆகிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும்.
அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநில மக்களின் பழக்க வழக்கங்கள் பிற மாநிலங்களில் இருந்து வேறுபட்டவை” என தெரிவித்து பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.