செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.12.94 கோடி மதிப்பீட்டில் 190 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்...
“மேல்பாடி பகுதியில் தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கோடி மதிப்பில் கட்டப்பட்டது. வெள்ளத்தின் காரணமாக பாலம் உடைந்து போனது. அதன் பிறகு ரூ.12.94 கோடி மதிப்பீட்டில் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மிகவும் பலம் வாய்ந்தது. இந்த பகுதியில் உள்ள சாலை பணிகள் தேர்தல் முடிந்தவுடன் சரி செய்யப்படும்” என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகனிடம்,
“ ‘திமுகவும், காங்கிரஸும் ஊழல் கூட்டணி.. அதை வீழ்த்துவதுதான் என்னுடைய முழு முயற்சி’ என பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே... அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?” என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் என்பவர் எந்தக் கட்சியையும் சார்ந்தவராக இருந்தாலும் நம்முடைய மதிப்பிற்குரியவர், சாலச் சிறந்தவர். மிகப்பெரிய இடத்தில் இருப்பவர். அவர் இப்படிப்பட்ட சிறிய வார்த்தைகளை கூறியிருப்பது அவ்வளவு பெரியவருக்கு அழகல்ல” என்றார்.
“ 'தேர்தல் பத்திரம் விவகாரத்தில் ஐடி மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை' என நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறாரே... அதுபற்றிய உங்கள் கருத்து” என செய்தியாளர்கள் கேட்டதற்கு... "அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை" எனக் கூறினார்.