“புழல் ஏரியால் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது” - ஆய்வு செய்தபின் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை புழல் ஏரியின் சுற்றுச்சுவரில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன் புழல் ஏரியால் மக்களுக்கு ஆபத்து வராது என்று தெரிவித்தார்.
அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்புதிய தலைமுறை

மிக்ஜாம் புயல் பாதிப்பில் பொழிந்த கனமழையால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி, நிரம்பி வழிகிறது. கடந்த 4 ஆம் தேதி ஏரிக்கரையில் உள்ள காவல்துறையின் கண்காணிப்பு கட்டடத்தின் தடுப்புச்சுவர் இடிந்து சேதமானது. பழைய கட்டடம் என்பதாலும், முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதாலும் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

புழல் ஏரி
புழல் ஏரிபுதிய தலைமுறை

இதைத் தொடர்ந்து கரையின் மேலே தண்ணீர் வழிந்து சுற்றுச்சுவரில் மோதியதால் மண்ணரிப்பு ஏற்பட்டு, சுற்றுச்சுவரின் ஒரு பகுதி கீழே சரிந்து விழுந்தது. அந்த வழியே தண்ணீர் வெளியேறியது. சாலையில் தொடர்ச்சியாக தண்ணீர் சென்றதால், விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. சுற்றுச்சுவர் சேதமடைந்ததால், ஏரியின் கரை வலுவாக உள்ளதா என காவாங்கரை, திருநீலகண்ட நகர், பாலாஜி நகர் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் புதிய தலைமுறை தரப்பில், கரையின் தடுப்புச் சுவரின் கீழ், உடைப்பு ஏற்பட்டது குறித்து நீர்வளத்துறை செயற் பொறியாளர் பொதுப்பணி திலகத்திடம் கேட்டோம். அவர், “இந்த மண் அரிப்பினால் புழல் ஏரிக்கு ஆபத்து இல்லை. இதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று கூறினார்.

ஏரியை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன்

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புழல் ஏரியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் நமது செய்தியாளரிடம் பேசிய அவர், “இந்த மண்சரிவால் ஏரிக்கு தொடர்பில்லை. புழல் ஏரியால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் வராது வராது வராது. இருந்த போதிலும் ஏரியின் நீர்மட்டத்தை 1 முதல் 1.5 அடிவரை குறைவாகவே வைக்க உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

அமைச்சர் துரைமுருகன்
மழைக்கால வெள்ளம் | சுகாதார பிரச்னைகள், தொற்றுநோய்களில் இருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும்?

மண்சரிவால் ஏரிக்கு எந்த பாதிப்பும் இல்லை - அரசு அறிக்கை

இதையடுத்து அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “புழல் ஏரி சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி. மீட்டர் ஆகும். 3300 மி.க. அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் உயரம் 2120 அடியாகவும், கரையின் நீளம் 7090 மீட்டராகவும் உள்ளது.

chennai rain
chennai rainpt desk

இன்று (07:12:2023) காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர்இருப்பு உள்ளது. அதேபோல் காலை 6.00 மணி நிலவரப்படி புழல் ஏரியின் நீர்வரத்து 550 கன அடியாகவும் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாகவும் இருந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக இருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

இந்நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக வினாடிக்கு 5500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றால் ஏரியில் மிக கடுமையான அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது, இதனால் காவல்துறை பாதுகாப்பு அறை பின் பகுதி கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவரில் மண் அரிப்பு ஏற்பட்டது.

இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறி சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com