கால்வாயில் கொட்டப்பட்ட பால் பாக்கெட்கள் யாருடையது?.. வெளியான தகவல் உண்மையல்ல - விளக்கமளித்த ஆவின்!

ஆவின் பால் பாக்கெட்கள் கால்வாயில் கொட்டப்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் விளக்கம் அளித்துள்ளது.
பால் பாக்கெட்கள்
பால் பாக்கெட்கள்ட்விட்டர்

மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதேநேரத்தில் மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். உணவு, குடிநீா், பால், மின்சாரம், தகவல் தொடர்பின்றி மிகவும் வேதனைக்குள்ளாகினர்.

குறிப்பாக, பால்கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர். அப்படி கிடைக்கப்பட்ட பகுதிகளில்கூட, அதிக விலைக்கு விற்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இன்னும் சொல்லப்போனால், முதியவர் ஒருவர் ஒரு பாக்கெட் பாலுக்காக வாகனத்தில் தொங்கிக்கொண்டு போன சம்பவம் இணையத்தில் வைரலாகி அனைவரின் மனதையும் உலக்கியது.

இந்த நிலையில்தான், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக உள்ள கால்வாயில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருந்ததாக இணையத்தில் வீடியோக்கள் வைரலாகின. இதுதொடர்பாக பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதையும் படிக்க: ”மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்”.. தமிழக அரசு அறிவிப்பு - முழுவிபரம்

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின் நிறுவனம்) சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் சில்லறை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதியன்று மிக்ஜாம் புயல் காரணமாக அதிகளவில் மழை பொழிந்ததால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி மின்சாரம் தடைப்பட்டது.

எனவே, தாம்பரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகலில் பல பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்கள் மூடப்பட்டன. எனவே, சில இடங்களில் அதே நாளில் (டிச.4) பொது மக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த நாளில் விற்பனை செய்ய இயலாத ஆவின் பால் பாக்கெட்கள் மற்றும் தனியார் பால் பாக்கெட்களைச் சில சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் வியாபாரிகள் அங்கே கொட்டிவிட்டு சென்றதாகத் தெரியவருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், ஆவின் பால் பாக்கெட்கள் வீணாகக் கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உ.பி.: பாஸ்போர்ட் விசாரணையின்போது போலீசாரின் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்.. நேரில் பார்த்த சாட்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com