தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை? - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை? - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை? - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் எவ்வளவு காலம் தேவை? சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சிபிஐயின் இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில், 100 ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.  

துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? மையப்பொருள் என்ன? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே அதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து( டிசம்பர் 2018) கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமமூர்த்தி அமர்வு முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ இயக்குநர் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வெண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்றைய தினம் விசாரணையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய சிபிஐ இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com