கிரிவலப்பாதையில் அதிர்ச்சி சம்பவம்.. பக்தியோடு சென்ற நேபாள பெண்ணுக்கு பாலியல் சீண்டல்!
திருவண்ணாமலையில், தீப மலையைச் சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து வரும் நிலையில், நேபாள நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் 40 வயதான நபர் தவறாக நடந்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர். அதிலும் சமீபநாட்களாக இரவும் பகலுமாக ஆயிரக்கணக்கானோர் கிரவலம் செல்கின்றனர். மழையோ, வெயிலோ எந்த சூழலானாலும், எந்த பொழுதானாலும் கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கை குறைவதில்லை. இப்படியாக, வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களும் அங்கு தங்கி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், திருவண்ணாமலையில் தங்கி இருந்த நேபாள நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், ஓரிரு தினங்களுக்கு முன்பு கிரிவலப் பாதையில் உள்ளஒரு பூக்கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த நபர் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றதுடன், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த பெண் தூதரகத்திற்கு புகார் அளித்ததின் பேரில், தூதரகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலையடுத்து மாவட்ட எஸ்பி சுதாகர் தலைமையிலான திருவண்ணாமலை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட சந்தை மேடு பகுதியை சேர்ந்த 40 வயதான சேட்டு என்பவர், நேபாள பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆன்மீக பூமியில் கிரிவலப்பாதையில் வைத்து பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.