உசிலம்பட்டி| +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு!
மதுரை அருகே உள்ள பூச்சிபட்டி அரசு பள்ளியில் படித்த 16 வயது மாணவி, பள்ளி மாற்றுச் சான்றிதழ் விவகாரத்தில் உசிலம்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியையுடன் ஏற்பட்ட தகராறு, தாயை இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வீட்டிற்கு திரும்பிய翌நாள் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கல்வி நிர்வாகம், மாணவர் மனநலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த பின் பூச்சிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். சில நாட்கள் மட்டும் பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் பள்ளி செல்லவில்லை. இதனால் பள்ளி தரப்பிலிருந்து பெற்றோரை அழைத்து மாணவியின் மாற்றுச் சான்றிதழை பெற்றுச் சென்று, வேறு பள்ளியில் சேர்க்கும்படி கூறியுள்ளனர்.
இதனால் கடந்த 24ஆம் தேதி உசிலம்பட்டி அரசு பள்ளிக்கு
மாணவியை சேர்ப்பதற்கான ஆலோசனையை பெற, மாணவியுடன் வந்த அவரது தாயார் தலைமையாசிரியை முன்பாக கைகட்டி நின்றிருந்தாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட மாணவி தனது தாயாரை கையை கட்ட வேண்டாம் என கூறி தனது தாயின் கையை தலைமையாசிரியை முன்பு தட்டி விட்டுள்ளார், அப்போது தலைமையாசிரியை மாணவியை திட்டியதாகவும், ஏற்கனவே படித்த பள்ளியில் இருந்து என்ன காரணமாக மாற்று சான்றிதழ் கொடுத்தனர் என விசாரித்து நாளை சேர்த்து கொள்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் வீட்டிற்கு வந்த மாணவி, அதற்கு அடுத்த நாள் 25ஆம் தேதி ஏற்கனவே படித்த பூச்சிபட்டி பள்ளிக்கு சென்று மாற்றுச்சான்று வாங்கி வந்த பின் அன்று மாலை 4 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் மாணவி இறப்பை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மாணவியின் தாயார் அரசு பள்ளி தலைமையாசிரியை முன்பாக நான் கைக்கட்டி நின்றிருந்ததை தடுத்த எனது மகளை அவர் இழிவாக பேசியதால் தான், தன்மகள் தற்கொலை செய்து கொண்டார் என அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தலைமையாசிரியை விமலாதேவி மீது தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

