மதுரை | கள்ளழகர் தீர்த்தவாரி விழா – கோவிந்தா கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் உற்சாகம்
செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை நோக்கி வந்த கள்ளழகர், இன்று காலை தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள். புடை சூழ வைகையாற்றில் எழுந்தருளினார். இதனையடுத்து ஆழ்வார்புரம் மற்றும் வைகை வடகரை ஆகிய பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், மதிச்சியம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக தோப்பரை பைகளை பயன்படுத்தி கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.. தீர்த்தவாரியின்போது கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிப்பாடி ஆரவாரத்துடன் உற்சாகமாக தீர்த்தவாரி நிகழ்வில் பங்கேற்றனர். இதில், பிரஷர் பம்புகளை பயன்படுத்தி சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மதிச்சியம் ராமராயர் மண்டபத்திற்கு பிரஷர் பம்புகளுடன் வந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோல் தோப்பரையை பயன்படுத்தி மட்டுமே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி செய்வதற்கு அனுமதி அளித்தனர். தடையை மீறி பிரஷர் பம்புகளை பயன்படுத்தி தீர்த்தவாரியில் ஈடுபட்டால் பிரஷர் பம்புகள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை மீறி பிரஷர் பம்புகளை பயன்படுத்தியவர்களிடம் பிரஷர் பம்புகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்