கல்வி நிதி ஒதுக்காதது ஏன்?.. மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம்!
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2025 - 2026ம் ஆண்டுக்கு, தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத சேர்க்கை, இதுவரை துவங்கவில்லை எனக்கூறி, கோவையை சேர்ந்த வே.ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதாடியதாவது:" கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 25 சதவீத இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில், 60 சதவீதம் தொகையை மத்திய அரசும், 40 சதவீதம் தொகையை, மாநில அரசும் வழங்க வேண்டும்.
கடந்த, 2021 முதல் 2023ம் கல்வியாண்டு வரை, மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. நுாறு சதவீதம் தொகையை, மாநில அரசுதான் வழங்கியது .கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை." என தெரிவிக்கப்பட்டது.
அப்போது மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு தரப்பில், சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டது. என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் வினவியபோது, தமிழக அரசுத் தரப்பில், மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லை என்பதால் நிதி ஒதுக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.