சவுக்கு சங்கர் ஜாமீன் வழக்கு | கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.. தீர்ப்பு ஒத்திவைப்பு!
’’யூடியூபர் சவுக்கு சங்கர் வீடியோ போடுகிறாரா இல்லையா என்பதை பார்ப்பதுதான் எங்கள் வேலையா’’ என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பின் தேதியை ஒத்திவைத்துள்ளார்.
Youtuber சவுக்கு சங்கர் தனது குழுவுடன் அன்றாட நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியை தனது Youtube மற்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார். அவதூறு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளைச் சந்தித்து வரும் சவுக்கு சங்கர், சமீபத்தில் அவர்மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு விசாரித்து சவுக்கு சங்கருக்கு 3 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் ராகவாச்சாரியார் ஆஜராகி, ”சவுக்கு சங்கர் சாட்சிகளை கலைக்கவில்லை. போலீசார் வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை தனிமைச் சிறையில் அடைத்து துன்புறுத்தியுள்ளனர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக்கூடாது” என்று வாதிட்டார்.
காவல்துறை சார்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ”சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். அவருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையை மீறி உள்ளார். மருத்துவக் குழுவின் அறிக்கையைப் பார்த்தாலே தெரியும் என்றும் அவர் தீவிர சிகிச்சை பெறவேண்டிய நிலையில் இல்லை. தனிமைச் சிறையில் அவரை அடைத்து வைக்கவுமில்லை. இது முழுவதும் தவறானது. அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புகள் உள்ளது” என்றும் கூறினார்.
மேலும், அவர் தொடர்ந்து யூடியூபில் வீடியோ பதவி ஏற்றம் செய்கிறார் எனறும் வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், ”எங்களுக்கு வேறு வேலை இல்லையா? யூடியூப் பாரப்பதுதான் வேலையா? இருக்கிற வேலை பார்க்கவே நேரம் சரியாக உள்ளது. யூடியூப் பார்க்க நேரம் இல்லை, எங்களுக்கு அந்த வேலையும் இல்லை. மனுதாரர் தினமும் யூடியூப் வீடியோ போடுகிறாரா என்றா நாங்கள் பார்க்க முடியும் என்று கருத்து தெரிவித்த அவர்கள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

