பெரம்பலூர் டூ மகாராஷ்டிரா..! நடந்தே ஊர் திரும்ப துடிக்கும் கூலித்தொழிலாளிகள்...!

பெரம்பலூர் டூ மகாராஷ்டிரா..! நடந்தே ஊர் திரும்ப துடிக்கும் கூலித்தொழிலாளிகள்...!
பெரம்பலூர் டூ மகாராஷ்டிரா..! நடந்தே ஊர் திரும்ப துடிக்கும் கூலித்தொழிலாளிகள்...!

ஊரடங்கு உத்தரவால் பெரம்பலூரிலிருந்து மகாராஷ்ட்ராவிற்கு ஒரு கூலித்தொழிலாளியின் குடும்பம் நடந்தே செல்கிறது. பசியால் அழும் குழந்தைகளையும், வறுமையால் வாடும் அவர்களையும் பார்க்கும்போது கண்கலங்கச்செய்கிறது.

கொரோனா வைரஸின் அச்சம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிபோட்டுள்ளது. உயிர்பிழைத்தால் போதும் என்றெண்ணிய பலர் சொந்த ஊருக்கு சென்று முடங்கிபோயுள்ளனர். அன்றாட கூலித்தொழிலாளர்கள் அல்லல் படுவதை சொல்ல வார்த்தைகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பிழைக்க வழியில்லாமல் பசியோடு எவ்வளவு நாளைக்கு வாழ்வது என்று எண்ணி இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு நடந்தே வருகின்றனர் புலம் பெயர்ந்த கூலித்தொழிலாளர்கள். அதன்படி திருச்சியில் தோட்ட வேலை பார்த்து வந்த உத்தம்சகரம் என்பவரின் குடும்பம் இங்குவாழ வழியில்லாததால் சொந்த மாநிலமான மகாராஷ்ட்டிராவிற்கு நடந்தே செல்கின்றனர்.

இருக்கும் உடைமைகளை மூட்டைமுடிச்சுகளாக கட்டி தலையில் சுமையுடனும் மனதில் வலியுடனும் செல்கின்றனர். கைக்குழந்தைகளின் பசியை ஆற்ற முடியாமலும், அருகில்தான் சொந்த ஊர் இருக்கிறது என்று தேற்ற முடியாமலும் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர்களை பார்ப்போரின் கண்கள் கலங்க வைக்கிறது.

பெரம்பலூர் வழியாக சென்ற அவர்களின் நிலை அறிந்த பெண் போலீசார் ஒருவர் உணவும், கைச்செலவிற்கு பணமும் கொடுத்து பசியாற்றி அனுப்பி வைத்தார். வழியில் சாலையோரம் இழைப்பாறி விட்டு தள்ளாத வயதிலும் தடியின் உதவியுடனும் செல்லும் இவர்கள் சேலம்,பெங்களூரு சென்று அங்கிருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

நடக்கும் கால்கலில் மட்டுமல்ல பேசும் வார்த்தையிலும் வலுவிழந்து இருக்கும் இவர்களின் நடைபயணம் அதிகதூரம் என்று தான் தெரியவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையுடன் துணிந்துள்ள இவர்களுக்கு அரசு அதிகாரிகள் உரிய உதவிகளை செய்திடவேண்டும் என்ற கோரிக்கையும் எழாமல் இல்லை.

இதனிடையே வீரகனூரில் வழிமறித்த சேலம் மாவட்ட காவத்துறையினர் அவர்களை அழைத்து வந்து பெரம்பலூர் போலீசாரிடம் மாவட்ட எல்லையில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் போலீசார் அவர்களை திருச்சி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது. ஆனால் எங்களை தமிழ்நாடு எல்லையை கடக்கவிடுங்கள் நாங்கள் எப்படியாவது ஊர் போய் சேர்ந்து விடுவோம் என்று கண்ணீர்மல்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கோடைவெயிலில் நடக்கும் சிறுமிகள் தங்களுக்கு பசியால் வயிறு வலிக்கிறது என்று வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com