காமராஜரின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்கக்கோரி வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

காமராஜரின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்கக்கோரி வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
காமராஜரின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்கக்கோரி வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

காமராஜரின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த ஜோவின் பார்ட்சுனேட் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " தேசிய தலைவர்களில் ஒருவரான காமராஜர் தமிழகத்தின் முதல்வராக 1954 முதல் 1963 வரை இருந்துள்ளார். கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரை அவரின் செயல்பாடுகள் அளப்பரியவை. அவர் தொடங்கிய பல கல்வித் திட்டங்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.

தமிழகத்தில் 20 அணைகளைக் கட்டிய பெருமை இவரையே சாரும். இவற்றைக் கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு, அவரது பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறது. அவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் காத்திருப்பு அறையில் காமராஜரின் 9 அடி உயர சிலையை வைத்துள்ளது. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 அன்று ஏராளமான கல்வி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காமராஜரை பின்பற்றுவோர் இணைந்து பல சங்கங்களை உருவாக்கி, ஏராளமான நலத்திட்டங்களையும் செய்து வருகின்றனர். காமராஜரின் பணியை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி தேசிய கல்வி நாளாக அறிவிக்கக்கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே காமராஜரின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com