எம்.பியாக நாளை பதவியேற்பு | “எனது கன்னிப்பேச்சு..” - ட்விஸ்ட் வைத்து சொன்ன கமல்ஹாசன்!
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா, அதிமுக-வை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் இன்றுடன் (ஜூலை 24) நிறைவடைகிறது. காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் கடந்த ஜூலை 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்த பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நாளை பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்க உள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் வென்ற மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “செய்தி சேகரிக்க மட்டும் நீங்கள் வராமல் என்னை வாழ்த்தி அனுப்பவும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் வாழ்த்துகள் மற்றும் மக்களின் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன்.
இது எனக்கு இந்தியனாகக் கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதை மற்றும் கடமையையும் நான் செய்ய உள்ளேன் என்பதைப் பெருமையோடுதான் சொல்லிக் கொள்கிறேன். எனது கன்னிப் பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்லக்கூடாது. சில விஷயங்களை, இங்கு பேசுவதுபோல அங்கு பேசக்கூடாது. அங்கு பேசுவதுபோல இங்கு பேசக்கூடாது. எனது ஆறாண்டுக்கால பயணத்தைக் கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்” என தெரிவித்தார்.